Saturday, October 5, 2013

இப்படியும் சில வியாதிகள்

என்னமோ சில நாட்களாக தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். என்னன்னவோ செய்து பார்த்து விட்டேன். தூக்கம் இமைகளைத் தட்ட மறுக்கிறது.  பொதுவாகவே எனக்கு வைத்தியர்களிடம் போக மனம் இடம் கொடுக்காது. இதை நான் சொன்னேன் என்று நீங்கள் நமக்குத்தெரிந்த வைத்தியர்களிடம் போட்டுக் கொடுத்து விடாதீர்கள் – வம்பாப் போகும். இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும். வைத்தியருக்குக் கொடுப்பதை வாணிகருக்குக் கொடுக்கலாமே எனும் Philosophyயில் ஊறிப்போயிருந்த என்னை சென்றமுறை தற்செயலாக பார்த்த வைத்தியர் “என்ன, ரொம்ப weight போட்டுட்டாப் போல இருக்கு? நடக்கறதில்லயா, இல்ல எண்ணைபதார்த்தமா சாப்பிடறேளா” ன்னு கேட்டு வெச்சார். உங்களுக்குத்தான் தெரியுமே, இந்த மாதிரி சமயங்கள்ள பக்கத்துலயே wife இருப்பாளே! இருந்தா. அடுத்த மாசம் மளிகை கடை bill பாதியா கொறஞ்சுபோச்சு. அப்புறம் என்ன? ஒங்களுக்குத் தெரியாதா? Oats  கஞ்சி தான். (இந்த Oats கஞ்சி கண்டுபிடிச்சவரைப் பாத்து MUG ஆல நாலு சாத்து சாத்தினா தேவலாம் போல இருக்கு.
இது ஒரு பக்கம் இருக்க என் தூக்கமின்மையை தவிர்க்க என்னோட தெருக்கோடி மருத்துவரைப் பாக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அவரோட Clinic வாசலுக்கு வந்துட்டேன். ஒரு அகலமான Board  ல சாம்பசிவன் M.D (அவர் தான் என்  Doctor), தணிகாசலம் M.D., FRCS(Lon) (அவரோட பிள்ளை), ஸ்டெல்லா ப்ரூஸ் M.D., DGO(Edin) (தணிகாசலத்தோட மனைவி) (அட! இங்க ஒரு கிசு கிசுப்புக்கு வாய்ப்பு இருக்கும் போல இருக்கே!) பேர், படிப்பு எல்லாம் எழுதி இருந்தது. அவர்களோட Consulting Hours பாத்தேன். உள்ள ஒரே கூட்டம்.  நல்ல வேளை, என் மனைவி முந்தின வாரமே அங்க வேலை செய்யற  வாசுகியிடம் சொல்லி appointment  வாங்கி வெச்சிருந்தா. கண்ணாடிக் கதவை திறந்த  பாட்டாளாத்துலேருந்து ஒய்வு எடுத்துண்ட Jacob D’Souza  வைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க Jacob’ னு சம்பிரதாயத்துக்கு கேட்ட என்னைப் பார்த்து “ஹூம்” சொன்னார். அப்புறம் அங்க இருந்த ‘Office’ க்குப் போய் “இங்க வாசுகி… ன்னு” மென்னு முழுங்கினேன்.  “அவங்க  Busy  ஆ இருக்காங்க, நீங்க  Doctor  தானே பாக்க வந்தீங்க, appointment  ஏற்கனவே வாங்கி இருந்தா அந்த padல உங்க பேரை எழுதி வெச்சுட்டு உக்காருங்க, கூப்பிடுவோம்” னு நபீசா பேகம் என் முகத்தைப் பார்க்கமலேயே சொல்லிட்டு தன் நகத்தை manicure  பண்ண ஆரம்பித்தாள். நானும் அருகில் பல வண்ணங்களில் இருந்த நாற்காலி ஒன்றில் சென்று அமர்ந்தேன். என்னைச் சுற்றி இருந்த பல பேர் தடி வைத்துக்கொண்டும், தாடி வைத்துக்கொண்டும், சொந்த  wheel chair இலும் (பொண்ணு, பிள்ளை, மாப்பிள்ளை – அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, துபாய் ஆக இருக்கும்னு நெனைக்கிறேன்). அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வந்தவர்கள்  prescription, Xray, ECG/EKG, Blood, Urin reports  ஆகியவற்றை கசக்காமல் ஜாக்கிரதையாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அருகே மற்றொரு யுவதி அவர் கொண்டுவந்த பையில் வெகு நேரமாக எதையொ தேடிக்கொண்டிருந்தார்.  அவரது கணவர் “இதுக்கு தான் அப்பவே சொன்னேன், எல்லா reports, papers  உம் இருக்கான்னு பாத்துண்டு கெளம்புன்னு” ன்னு சொல்லி அவரோட பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அந்த பேப்பர் எல்லாம் அவர் சம்பந்தப்பட்டது என்று பின்பு புலப்பட்டது.
 இந்த சமயத்துல ஒரு பெண் – மாநிறம், பின்னல், சின்ன தங்கத் தோடு, கழுத்தில் மெல்லீசு தங்க சங்கிலி – pendant  ஏதும் இல்லைன்னு நினைக்கிறேன். அடிக்க வராத நிறத்தில் கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட மடிப்பு கலையாத புடவை,  matching blouse ஒரு கையில் watch,  மறு கையில் மெல்லிய தங்க வளையல்.  கை நிறைய காகிதங்கள், ஒரு ball point  பேனா, நெற்றியில் ஒரு சின்ன Sticker பொட்டு.  முகத்திலும், நடையிலும் ஒரு பர பரப்பு.  இந்தப் பெண்ணையும் அவளது ஆடம்பரமில்லாத ஆபரணங்களையும், உடையையும் பார்த்தால் – அவளுடைய பெற்றோர்கள் அவளிடம் – “இத பாரும்ம, எங்களால முடிஞ்சது இவ்வளவு தான், இதுக்கு மேல நகை நட்டு வேணும்னா நீயா சம்பாதிச்சு வாங்கிக்கோ அல்லது புருஷன் வீட்டுக்குப் போய் பண்ணிக்க” ன்னு சொல்லி இருப்பாங்கன்னு தோண்றது.  அவளது நடை, உடை, பாவனை, காரியத்தை எடுத்து ஆளும் லாகவம், மற்ற பெண்கள் அவளைச் சுற்றி சுற்றி வந்து காரியங்களைச் செய்வதைப் பார்த்து அவள் தான் வாசுகி என்று தெரிந்து கொண்டேன்.  (“என்ன? தெரியலை. இல்லை இன்னும் Matrimonil.com  ல அவளை பதிவு செஞ்சா மாதிரி தெரியலை”).
என் பெயரைக் கூப்பிட்டாள். அவளை சிரிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பார்கள் போலும். அவள் எந்திரம் மாதிரி நகர்ந்து என்னை எடை பார்க்கும் machine இல் ஏற்றி, BP பார்த்து, அதே சமயத்தில் என் மாத்திரை விவகாரங்களை குறிப்பெடுக்க முனைந்தாள். அப்போது, “எனக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை, தூக்கம் வரவில்லை – அதனால் Doctor ஐப் பார்த்து போகலாம் என வந்தேன்” என்று சொன்னேன். அதற்கு அவள், ‘எப்படியும்  doctor  யாரையும் BP, Weight, Height check பண்ணாமல் பார்க்க மாட்டார், உங்களுக்கு எல்லாம் normal  ஆத்தான் இருக்கு” என்று சொல்லி Doctor  முன் கொண்டு நிறுத்தி அவர் காதில் மட்டும் விழுவது போல் ஏதோ சொன்னாள்.
இங்கு என்  Doctor பற்றி நாலு வரிகள் சொல்லி ஆகணும். இவர் ஒரு M.D., வெறும் M.D.  அதாவது எல்ல விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்ப்பார்.  Diabetes, Kidney problem, Heart, Lungs,  கால் மூட்டு வலி, வயிற்று வலி, இடுப்பு வலி, allergy  என பல வித நோய்களுக்கும் நோயாளிகள் இவரிடம் வந்த வண்ணம் இருப்பார்கள்.  வலது கை சுண்டி விரல் specialist, இடது கை பெரு விரல் specialist  என ஆகி விட்ட இந்தக் காலத்தில் பல வியாதிகளையும் குணமடைய செய்யும் இத்தகைய ‘Primary Care/Family Care Physicians’ க்கு நாம் கொடுக்கும் பெயர் “வெறும் M.D”.  நானே பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். “அவர்கிட்டயா நீ போற? அவர் வெறும் M.D ன்னா?” 
அவர் என்னைப் பார்த்து, “என்ன கணபதி சார், ஒடம்புக்கு என்ன” ன்னு கேட்டார்.  “என் வ்யாதியே இது தான்  Doctor.   இப்ப நீங்க “என்ன கணபதி சார், ஒடம்புக்கு என்ன” ன்னு கேட்டீங்க பாருங்க , அதையே மொதல் வரியா வெச்சு ஒரு சிறுகதை எழுதத் தோணுது Doctor.  என்ன பாத்தாலும், எதைப் பாத்தாலும், யாரைப்பாத்தாலும் அதை base பண்ணி ஒரு கதை எழுதத் தோணுது. இத்தனைக்கும் நான் ஒரு எழுத்தாளன் கூட இல்லை Doctor. நான் பேசறச்ச நீங்க அந்த paper weightஐ சுத்தறது, குனிஞ்சு அந்த மேஜை drawerத் திறக்கறது, அலுத்துப் போய் உங்க கண்ண்டி மேல் வழியா பாக்கறது, ஸ்வாரஸ்யம் இல்லாம cell phoneஐ கொடயறது, மணி அடிச்சு வாசுகியை கூப்பிடத்துடிக்கிறது எல்லாமே..எல்லாமே தனித் தனி கதையா எழுதத் தோண்றது Doctor. வாசுகியோட நடை, உடை, பாவனை, அவள் காரியம் செய்யும் விதம், உங்கள் குறிப்பறிந்து பணி புரியும் சாமர்த்தியம் (இந்த சமயத்தில் அவர் வாசுகியை வெளியே போகச்சொல்லி சாடை காட்டியதை நான் கவனிக்கத் தவரவில்லை) எல்லாமே இப்பவே இந்த இடத்துலயே ஒரு notepadஉம் கையுமா ஒக்காறத் தூண்டுது Doctor.  “அதுனால என்ன, எழுதிடவேண்டியதுதானே, நானும் படிச்சுட்டுப்போறேனேன்னு” சொன்னா எப்பிடி  Doctor. தூங்க முடியலை Doctor. அந்த இருட்டு, குறட்டை, சந்திர ஒளி, சுவர்க் கோழிகளின் ரீங்காரம், மழைத் தூரல் எல்லாம் எனக்கு ஒரு கதைக் கருவை க் கொடுத்த வண்ணம் இருக்கு Doctor. ஒரு வேளை போதைப் பொருள் சாப்பிடறவங்களுக்கு வரும் நினைவுச் சங்கிலியும் (chain of thoughts) என் நிலமை போலத்தானோ?
Room வாசல்ல வாசுகி வந்து நின்னது என்னோட Rs 50 க்கான நேரம் ஆயிடுத்துன்னு உணர்த்தன்னு புரிஞ்சுண்டேன்.  அவரும் அதை ஆமோதிப்பது போல் அவரோட கண்ணாடியை கழட்டி அருகில் இருந்த paper napkin ஆல் துடைத்துக்கொண்டே “இது ஒண்ணும் பெரிய விஷையம் இல்ல”. கொளறுபடியாக spelling  எழுதி தப்பாக pronounce செய்வதாகத் தோண்றும்  ஒரு மனநோய் பெயரைச் சொல்லி “எதுக்கும் நீங்க ஒரு psychiatrist ஐப் பாக்கறது நீங்க எதிர்பாக்கற relief  கொடுக்கும்னு நினைக்கிறேன்” னு சொல்லி ஒரு காகிதத்தில் அந்த மனோதத்துவ நிபுணரின் பெயர், விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறித்துக் கொடுத்தார். வாசுகி என்னை அங்கிருந்து மெதுவாக நகர்த்தி சாமர்த்தியமாக billing clerkஇடம் போய் சேர்த்தாள்.

இப்ப நீங்க சொல்லுங்க, நான் அந்த psychiatrist ஐப் போய் பாக்கணுமா, வேண்டாமா?

அன்புடன்

குமார் சின்னம்பி
ஆகஸ்ட் 06, 2013

No comments: