Saturday, May 14, 2016

வெளிச்சத்தில் இருட்டு





இப்ப என்ன காலங்கார்த்தால கோடம்பாக்கத்துல ஜோலி, சனிக்கிழமை ஒரு நாள் நிதானமா சமைக்கலாம்னா, காபி டிபன்னு சாப்பாட்டுக் கடையை ஆரம்பிக்கச் சொல்றேளே!

இத பாரு ரங்கம், நீ தானே தினம் "நீங்க எழுதின கதையெல்லாம் ஒரு ஈ, காக்கா படிக்கறதில்ல, இருக்கிற கீக்கிடத்துல தூசு படிஞ்சிண்டிருக்கு, பழைய பேப்பர் கடைல போட்டா நாலணா, எட்டணா கிடைக்கும்னு சொன்ன? அதை பழைய கடைல போடத்தான், வெயிலுக்கு முன்னாடி, கோடம்பாக்கத்துல ஒரு பட்சணக்கடை தெரியும், அவங்கிட்ட போலாம்னு கிளம்பினேன்.

ஏன், நம்ப தெரு முனைல இருக்கற கடைல போட்டா போறாதா, உங்க கதைகளுக்கு பட்சண வாசனை தான் வேணுமோ ன்னு சொல்லி தட்டு ல 3 இட்லியும், மிளகாய்ப்பொடியும் கொண்டு வந்து 'டங்' னு வைத்தாள் ரங்கம். சட்னி கேக்க ஆசை தான். ஆனால் அதைக்கேட்டால் தானே அது வாகி விடுவோமோ என்ற பயத்தில் போட்டதை சாப்பிட்டு எழுந்தார். தன் கதைகளை பத்திரமாக, போன வருடம் அவள் தீபாவளிக்கு வாங்கிய புடவைக்குக் கிடைத்த -கட்டை கைப்பிடி வைத்த -Pothy's bagல் paper நுனி மடியாமல் வாஞ்சையுடன் எடுத்து வைத்தார். பட்சணக் கடைக்காரர் அவர் பையை வாங்கிக் கொண்டு 80 ரூபாய், 50 காசு கொடுத்தார்.

திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்து சேரும் போது மதியம் 1 மணி ஆகிவிட்டது. Solar power, gobar gas, kerosene என்று எதுவுமே இல்லாமல் கொதித்துக்கொண்டிருந்த ரங்கமும் global warmingக்கு முக்கிய காரணம் என அவர் உறுதியாக நம்பினார். 'ரங்கம், இந்த 80ரூபாய், 50 காசை உள்ள எடுத்து வை' னு சொல்லிட்டு குளிக்கப் போனார்.

10 நாள் இருக்கும். Phone அடிச்சது. அதை எடுத்ததும், "sir, திலகன், எழுத்தாளர் இருக்காரா.'

'நான், திலகன் தாம்பா பேசறேன்'

"அப்படியா, அப்ப நல்லதா போச்சு, உங்களை நலன் குமாரசாமி இப்பவே பாக்கணுங்கறார் sir, Bharani Studio வாங்க."

யாருப்பா நலன் குமாரசாமி

Cinema producer, director sir. இப்ப கூட ,"கூட்டம் வந்தால் தனித்திருக்க முடியாது" னு ஒரு படம் 5 வாரமா house full ஆ போயிட்டிருக்கே, அதோட இளம் director sir. உங்க 'வெளிச்சத்தில் இருட்டு' ங்கற கதையை படிச்சிட்டு இப்பயே உங்களைப்பாக்கணுங்கறார் sir , கிளம்பி வாங்க, வண்டி அனுப்பறோம்.

ரங்கம், நான் வெளில கிளம்பறேன். சாப்பாடு வேண்டாம். சாயங்காலம் ready ஆ இரு, தங்க மாளிகை போவோம் என்று சொல்லிக்கொண்டே company carல் ஏறி உட்கார்ந்தார்.

அந்த கோடம்பாக்கம் பட்சணக் கடை ல தான் சினிமாக் காரங்க எல்லாம் snacks வாங்குவாங்க, அங்க பட்சணத்தைநிராகரிக்கப்பட்ட கதைகள் எழுதின paper ல தான் பொட்டலம் கட்டி எல்லோருக்கும் போகும் எனத் தெரிந்து சிரமத்தையும், ரங்கத்தோட கோவத்தையும் பொருட்படுத்தாம அன்னைக்கு கோடம்பாக்கம் போய் தன் கதைகளைப் போட்ட தன்னோட செயலைத் தானே மெச்சிண்டு பரணிக்குள்ள தரணி ஆளும் கனவுகளோடு நுழைந்தார்!


No comments: