ப்ராடிஸ்லாவாவில் ஒரு ப்ராம்மண சாப்பாடு!
பழய செக்கோஸ்லோவேகியா செக் ரிபப்ளிக், ஸ்லோவேகியா என்று ரெண்டாகப்பிரிந்தது. ப்ராடிஸ்லாவா - ஸ்லோவேகியாவின் தலைநகரம். நான் தற்சமயம் ப்ராடிஸ்லாவாவில் வாசம்.
ப்ராடிஸ்லாவா சிறிய நகரம். எங்கு பாத்தாலும் சிலைகள். டனுபே (Danube) எனும் நதி ஊருக்கு அழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. இள வயதினர் அதிகம் நடமாடும் இடம். நகர மத்தி(City Center) இடத்தில் தான் எல்லாமே. ஊர் முழுவதும், இரவு பகல் என்றில்லாமல், எங்கேயும், எப்போதும் வாகன ஊர்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கும். நம் ஊர் பல்லவன் போன்ற வாகன ஊர்திகள், உயரே மின் கம்பியைப் பிடித்துச்செல்லும் Trollies, தண்டவாளத்தில் செல்லும் Trams - இவை தான் பொது போக்குவரத்து வாகனங்கள். இவற்றைத்தவிர வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல ரயில் ஊர்திகளும் ஏராளம்.
நான் பெரும்பாலும் உபயோகிப்பது நட ராஜா சர்வீஸ் தான். மக்கள், வேலை இருக்கிறதோ இல்லையோ, எங்கு பார்க்கினும் நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். அதுவே ஒரு கண் கொள்ளாக் காட்சி! நாலு இருக்கைகளும், ஒரு மேசையும் பார்த்துவிட்டால் ஒரு வண்ண விரிப்பை விரித்து தெரு ஓர உண்ணும் விடுதி அமைத்து விடுவார்கள். அங்கு மணிக்கணக்கில் உட்கார்ந்துகொண்டு காபியும், பியரும்(Beer) குடித்துக்கொண்டிருப்பார்கள். சிறியவர், பெறியவர், ஆண், பெண் என்று பாராமல் எல்லோரும் புகை பிடித்துத் தள்ளுகிறார்கள்.
ஊரில் தடுக்கி விழுந்தால் ஒரு உண்ணும் விடுதி. ஊரில் சிலைகள் அதிகமா, உண்ண்ம் விடுதிகள் அதிகமா என்று பட்டி மன்றம் வைத்தால் சாலமன் பாப்பையா தீர்ப்பு கூற திண்டாடிப்போவார்! அரபு நாட்டு உணவு வகைகளும், பிஜா(Pizza) மோகமும் அதிகம். இதைத் தவிர வித வித மான ரொட்டிகள், பல நிறங்களிலும், பல பரிமாணங்களிலும் கிடைக்கும். பழங்கள், காய் கறிகள், கறிகள் வாங்க பல கடைகள் உள்ளன. விலை அதிகம் - இருப்பினும் காலி ப்ளவர், கரட்,உருளை,தக்காளி, குடமிளகாய்,நூல்கோல், பீன்ஸ், கீரை என எல்லாம் கிடைக்கும்.
வந்த புதிதில் இடம் புரியாமல் தினந்தோரும் அரபுக்கடைக்குச் சென்று 'ஃபலாபல்'(Falafal), அல்லது பிஜா வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு நல்ல விடுதியில் (Hotel) தங்கி இருந்ததால் காலையில் நல்ல காலை உணவு (breakfast) சாப்பிட்டுவிடுவேன். (நான் ஏதோ பொங்கல், உப்புமா, இட்லி, வடை, சட்னி, சாம்பார் என ஜமாய்த்ததாய் நினைக்காதீர்கள். ரொட்டி, வெண்ணை, பாலாடைக்கட்டி(Cheese), பழங்கள், இவை தான் காலை உணவிற்கு). இரவு எதையேனும் சாப்பிட்டு சமாளித்தேன்.
ஒரு வாரம் கழித்து கால் போன போக்கில் சென்ற பொழுது "கோவிந்தா - சைவ உணவு" விடுதி என்ற பெயர்ப் பலகை ஒன்றைப்பார்த்தேன். இடுக்கான ஒரு கதவு மூலம் உள்ளே நுழைந்து பார்த்தால் தட்டுச் சத்தங்களும், டம்ளர் சத்தங்களும் வயிற்றுக்கு ஏ ஆர் ரெஹ்மானை நினைஊற்றின!. உயரமான, வெள்ளையான, இளம் ஆண்கள், குடிமி முடிந்துகொண்டு, பளிச்சிடும் வெள்ளையில் வேட்டி உடுத்தி மேஜை துடைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் கல்லா பெட்டி அருகே வத்தகாச்சியாய் ஒரு பெண், வெள்ளைக்காரப் பெண், உடலில் சேலை சுத்திக்கொண்டு சோகமே உருவாய் உணவு கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு carrot salad, ஒரு உருளைக்கிழங்கு கூட்டு அல்லது கறி, தண்ணியாக பருப்பு,சாதம் - சின்ன அளவு 3.80; பெரிய அளவு 4.80 யூரோ. பெரிய அளவில் ஒரு தட்டு வாங்கி கூட்டத்தின் ஊடே நடந்து சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து அனுபவித்து உண்ணலானேன். நன்றாகத்தான் இருந்தது. என்ன - உப்பு, உறைப்பு, எண்ணை கம்மி. இப்படி இரண்டு மூன்று நாட்கள் ஓடின. பிறகு ஒரு நாள் உப்பு உறைப்பு அத்தியாவசியம் என்று தோன்றியபின் மறுபடியும் நடந்தேன் நடந்தேன் ப்ராடிஸ்லாவாவின் ஓரத்துக்கே நடந்தேன். எதிரில் தென்பட்டது ஒரு பெயர்ப்பலகை! "கணேஷ் - vegetarianska...". கண்ணை மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். நான்கு கேரளத்து சகோதரர்கள் கரண்டியும் கையுமாய் நின்று கொண்டிருந்தார்கள். 5 யூரோ விற்கு வரையரைஅற்ற உணவு! சாதம், ஒரு சப்பாத்தி, மோர் குழம்பு(?), ஒரு கறி, பாயசம்.உப்பும் உறைப்பும் இருந்தது - ஆனால் ஒரே சீராக இல்லை. இவை எல்லாம் நான் வீடு தேடும் படலத்தை விரைவு படுத்தியது.
நல்ல வீடு கிடைத்தது. சமயலைத் தொடங்க ஆயத்தமானேன். "Long Grain" அரிசி தான் கிடைத்தது. தயிர் கிடைத்தது. மீரா கொடுத்த புளிக்காய்ச்சலை நண்பனின் குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மீட்டு வந்தேன்(:-(). சித்ரா கொடுத்த தேங்காய்ப்பொடியும் இருந்தது. சாதம் குழசலாய் வந்ததில் சுவை இல்லை. வேறு வழி இன்றி பாசுமதி (Basumathi) வாங்க ப்ராடிஸ்லாவாவை சல்லடை போட்டு அலசினேன். கண்டுபிடித்துவிட்டேன் ஒரு குஜராத்தி கடையை! "கண்டேன் சீதையை" என்று ஹனுமன் கூறக்கேட்ட ராமர் எத்தனை பரவசம் அடைந்திருப்பார் என்பதை உணர்ந்தேன். ப்ரசாத் என்ற அந்த கடை முதலாளி என்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். ஹிந்தியில் பேச முனைந்தார். நான் ஆங்கிலத்தில் சம்பாஷிக்க ஆரம்பித்தேன். வேறு வழி இன்றி அவரும் ஆங்கிலத்தில் பேசினார். அரிசி, பருப்பு, சீரகம், கடுகு, மஞ்சப்பொடி, புளி பேஸ்ட் எல்லாவற்றயும் அள்ளிக்கொண்டு பணம் கொடுக்க ஆயத்தமானேன். பர்சைத்திறந்தால் பணம் இல்லை. அதனை உணர்ந்த ப்ரசாத், அதனால் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. அடுத்த முறை வரும்பொழுது கொடுத்தால் போதும் என்றார். அவருக்கு நன்றி சொல்லி சாம்பார் வைத்து ஒரு நாள் அவரை சாப்பிட அழைப்பதாய் சொல்லி விடை பெற்றேன்.
எல்லாம் வந்தாகி விட்டது. இனிமேல் சமயலைத் துவக்க வேண்டியதுதான் என்று நினைக்கையில் சாம்பார் பொடி இல்லாதது நினைவுக்கு வந்தது. மறுபடியும் புளிக்காய்ச்சல், தேங்காய்ப்பொடி, தயிர் சாதம். ஓரு நாள் கீரை வாங்கி தக்காளி போட்டு கூட்டு. mixed vegetables கறி, சோளம் கறி. இதனூடே புதிதாக வீட்டிலேயே தயிர் தோய்த்து நன்றாக வர ஆரம்பித்துவிட்டது. இப்படி ஒரு மாதிரி போய்க்கொண்டிருந்தாலும் ஏதொ ஒரு இயலாமயும், இல்லாமயும் உருத்திக்கொண்டிருந்தது. லல்லு வரும் நாள் ஆகி விட்டது. அவள் வரும் தினம் மட மட வென்று அவளுக்குப்பிடித்த 'Dhall Fry' யும் 'Corn' கறியும் பண்ணி சமாளித்தேன். மறுநாள் காலை வேலைக்குச் சென்று விட்டேன். அந்த 'Dhall Fry' யும் 'Corn' கறியும் அன்றும் அதற்கு மறு நாளும் வரும். இருப்பினும் லல்லு தான் கொண்டு வந்த சாம்பார் பொடி, ஊருகாய், புளி, பெருங்காயம், கொதமல்லி, வத்த மிளகாய், பச்ச மிளகாய் இவற்றை வைத்து ஒரு உருளைக்கிழங்கு கறி, சாம்பார், வெத்தக் கொழம்பு, ரசம் என 4 நாட்களுக்கு சமைத்து வைத்து விட்டு அவளுடைய ப்ராடிஸ்லாவா சுற்றுலாவிற்கு சென்று வந்தாள்.
இன்று சனிக்கிழமை. சமைக்க ஆசை (mood?) வந்து விட்டது. மட மட வென்று குளிர் பதனப் பெட்டியில் இருந்து நூல்கோல், பச்சை மிளகாய், கொத்த மல்லி எடுத்து நறுக்கினேன். பிட்டு வைத்த காலி ஃப்ளவரில் கறி பண்ணினேன். முளை விட்ட பயறு வாங்கி வைத்திருந்தேன். அதில் உப்பு உரைப்பு போட்டு தாளிச்சு கொட்டி ஒரு சுண்டல் பண்ணிவைத்தேன். பருப்பை micro wave cooker இல் வேக விட்டேன். பிறகு அரிசியும் Micro wave இல்வைத்தேன். நூல்கோல் சாம்பார் வெந்து கொண்டிருந்தது. இதனூடே ப்ரபாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அடுப்பை சின்னதாக வைத்து விட்டு பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் உலக விஷயங்களை அலசினோம். சமையல் பற்றிய பேச்சு வந்ததும் ப்ரபா சமீபத்தில் மானமதுரையில் லோசனா அக்கவிடம் கற்ற விரைவு ரசம் பற்றிய செய்முறையை பகிர்ந்துகொண்டாள். என்னிடம் சீரகம், மிளகாய், தனியா, துவரம் பருப்பு பொடி பண்ண சாதனம்(Mixi) இல்லை. ஆனால் பொடி இடிக்கும் கல்லும் சிறிய உரலும் இருந்தது. அதைக்கொண்டு ஒரு உந்துதலில் பொடி பண்ணிக்கொண்டேன். நாளைக்குச் செய்வதாய் இருந்த ரசம் இன்றைக்கே ரெடி!.
சாம்பார், கறி, ரசம், சுண்டல்,வெத்த கொழம்பு, தயிர், ஊறுகாய். இது ப்ரம்மப் ப்ரயத்தனமா இல்லை ப்ராம்மணப் ப்ரயத்தனமா தெரியவில்லை.
ப்ராடிஸ்லாவாவில் ப்ராம்மண சாப்பாடு சாத்தியமே என்று நிரூபித்துவிட்டேன்.
அன்புடன்
குமார்
No comments:
Post a Comment