Monday, October 22, 2012

"Aasaiyil Ore Kaditham"

ஆசையில் ஓர் கடிதம்!


அன்புள்ள மாமா
இன்று நான் கீழ்க்கண்ட ஆங்கிலக் கட்டுரைஐ நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் படித்தேன். Bob Simpson அவர்களின் தயக்கம் உங்களுடைய எண்ணப் பிரதிபலிப்பு போல் உணர்ந்தேன். 

அவருக்கு 94 வயது. அவருடைய மனைவியும் 90ஐத் தாண்டி விட்டார்கள். 
அவர்கள் வசிக்கும் ஊர் கைரோ, இல்லினாய், நீங்கள் வசித்தது மானாமதுரை, தமிழ்நாடு.
அந்த ஊரில் மிஸ்ஸிஸிப்பி ஆறு, மானாமதுரையில் வைகை ஆற்றுப்படுகை.
மிஸ்ஸிஸிப்பியில் வெள்ளம்மானாமதுரை ஆற்றில் வறட்சி("இல்லப்பா, இப்பல்லாம் நல்லா தண்ணி ஒடறதப்பா").

ஒரு காலத்தில் 15000 பேர் வசித்த கைரோ, இல்லினாயில் இப்போது 3,000 பேர் மட்டுமே.  ஊரில் தற்சமயம் ஒரே ஒரு மருத்துவர்.
வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. எல்லோரும் ஊரைவிட்டுப் போக ஆயத்தமாகிவிட்டனர.( மானாமதுரையில் இது தலைகீழ்).

இருப்பினும் Bob ற்கு ஊரைவிட்டுச்செல்ல மனம் இல்லை.  அவரது மனைவி நீண்டநாளாக ஊரைவிட்டுப் போக விரும்பினாலும்,அவர்களுடைய பெண் அருகிலேயே வசிப்பதால், அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

இந்த முதியவர்கள் உங்களைப்போலவே இன்னமும் தங்கள் காரியங்களைத் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். இவரும் அந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு அவ்வப்பொழுது ஆலோசகராக இருந்துவருகிறார்.  இவர் அந்த ஊர் தீ அணைப்பு பணியில் 54 வருடங்களாக பணி செய்து வருகிறாராம்!  இதற்கு முன் பல முறை வெள்ளம் காரணமாக பல பேர் ஊரைவிட்டுச் சென்றாலும் இவர் இது வரை அந்த ஊரை விட்டுச்செல்வதைத் தவிர்த்தார் ("நாளைக்குப் போறேன்" என்று சொல்லி இருப்பார் எனத் தோன்றுகிறது).

இந்த முறை தவிர்க்கமுடியவில்லை போலும்.  அவர்கள் 63 வருடங்களாக வசித்து வந்த வீடுதனை விடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது!

மானாமதுரையும், கைரோ, இல்லினாயும் சிறிய ஊர்கள்.  Bob போல் Ram உம் இந்த சின்ன ஊரை விடுத்துச் செல்வதைத் தவிர்க்கப்பார்த்தார். அவருக்கு ஆற்றில் வெள்ளம்.  இவருக்கு ஆத்தில் (அன்பு) வெள்ளம்.  அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்அவர் தீ அணைப்பு இலாகா, இவர் கல்வி இலாகா; அவருடைய பெண் அதே ஊரில்.  இவருடைய பெரும்பாலான குழந்தைகள் அமெரிக்காவில். இருவருக்கும் ஊரில் எல்லோரிடமிருந்தும் மரியாதை.  நண்பர்கள்.  ஊரை விடுத்து வருவதில் உள்ள சிரமம் புரிகிறது. 

என்னதான் "மானமதுரை முன்போல் இல்லப்பா, எங்க பாத்தாலும் கட்டடங்கள்,புழுதி, கால் வைக்க இடம் இல்ல, தெருவுக்கு தெரு டாக்டர்,மதுக்கடைகள், போக்குவரத்து நெரிசல், அரசியல்வாதிகளின் ஆதிக்கம், லஞ்சம், ஊழல், விலைவாசி ஏற்றம், இனிமே அந்த ஊரில் இருக்க முடியாதப்பா" என்று சொன்னாலும் உள்ளூர "லஷ்மீ, ஊருக்குப் போயிட்டா தேவலைன்னு தோண்றது" என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

என்னைப்போல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எந்த ஒரு ஊருடனும் ஐக்கியப்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி போய்விட்டது. இது நல்லதா இல்லயா தெரியவில்லை.

கீழ்க்கண்ட கட்டுரையைப் படித்து அசைபோடுங்கள்.

அன்புடன்
குமார் சின்னம்பி

No comments: