Thursday, May 16, 2013


ஒரு கறி கூட்டாகிறது!

முதலில் தலைப்பைப்பற்றி எழக்கூடிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறேன்.  

ஒரு கறி கூட்டான கதைன்னு பேர் வைக்கப் பார்த்தேன். ஆனா கிட்டத்தட்ட அந்தப் பேர்ல "சொல்ல மறந்த கதை" ன்னு ஒரு அழுமூஞ்சி படத்தை சேரன் எடுத்துட்டார்.
சரி, நம்ப 'நச்' ன்னு "கறியுடன் நான்" னு பேர் வைக்கலாம்னு பாத்தா ஜெயா டி வீ ல "ஹரியுடன் நான்" னு ஒரு நிகழ்ச்சி ஜனரஞ்சகமா ஓடிண்டிருக்கு.
"
 ஒரு நூல்கோல் கூட்டாகிக்கொண்டிருக்கிறது" ன்னு பேர் வெச்சா புஷ்பா தங்கதுரை கோபிப்பாரோ என்னவோ.  
சரி கட்டுரையின் கருவுக்கு ஏத்தாமாதிரி பேர் வெச்சுட்டா ஜெத்மலானி கிட்ட போக வேண்டிய அவசியம் இருக்காதுன்னு "ஒரு கறி கூட்டாகிறது" ன்னு தலைப்பு குடுத்துட்டேன்.  இது கூட " ஒரு ஓடை நதியாகிறது" மாதிரி இருக்கோ?  (டைரக்டர் ஸ்ரீதர் படம்.  என்னோட most favorite தமிழ்ப் படஇயக்குனர். ( http://www.youtube.com/watch?v=Uatd7Z9i1jI) எனக்குப்பிடித்த "தலையைக் குனியும் தாமரையே" (ஜேம்ஸ் வசந்தனின் சமீபத்திய வெற்றிப் பாடல் - "கண்கள் இரண்டால்" (http://www.youtube.com/watch?v=3Y8jQoI-VvI) கூட இதே ராகம்தான் - ரீதி கொவுளை) பாட்டு இடம் பெற்ற படம். இனிமே வேற தலைப்பை யோசிக்கப் போறதில்லை.  

நான் முனைந்து சமைக்க வேண்டுமானால் மனதிற்கு பிடித்த பாடல்களைப் பாடிக்கொண்டேதான் சமைப்பேன்.இன்று முதல் முதலில் நினைவுக்கு வந்த பாடல் " நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்(http://www.youtube.com/watch?v=0bk_0PYlJ58)".  
ஏதேனும் சைவ சமையல் பாட்டு பாடலாம்னு பாத்தா ஒண்ணும் நினைவுக்கு வரலை.  "கல்யாண சமையல் சாதம்" மாயா பஜார் (http://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc&feature=related) பாட்டு தெரியும்.  அது விவாஹ சமையல், என்னோடதோ விவகாரமான சமையல் - அந்த பாட்டு சரிவராது.
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு - முதல்வன் (http://www.youtube.com/watch?v=nWCq-QeZCJg) நல்ல ரிதம்..நமக்கு கருவாடு மணக்காது.
வித்யா சாகர் - எனக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் போட்ட இசைல  பா ஒரு பாடல் - அள்ளித்தந்த வானம் -இந்தப் படத்தில் வர வேண்டிய பாடல் ஆனால் வரவில்லை- (பாடலை இணைத்துள்ளேன்) - "ஒரப்பா கொழம்பு வெச்சு ஊரித்தான் திங்கயிலே" ன்னு ஒரு வரி தான் வரும்.  
http://www.youtube.com/watch?v=GwlGH-prXmc&feature=related இந்தப்பாடலோட படப்பிடிப்பு (விஷுவல்?) அப்பளாம் இடுதல், வடை செய்வதை நினைவுக்குக் கொண்டு வரும். மதுபாலாவையும், ஏ ஆர் ரெஹ்மானையும் தாண்டி கவனிக்க வைத்த இயல்பான விஷுவல். 
மேற் சொன்ன எல்லா பாடல்களையும் பாடிக்கொண்டே வெங்காயம் நறுக்குதல், தக்காளி வெட்டுதல், பச்சை மிளகாய் அரிதல், பூண்டு உரித்தல் முதலானவற்றை முடித்துக்கொண்டேன்.  அடுப்பில் ஹேமா சாதம் வடிக்கச் சொல்லிக்கொடுத்த உத்தியையே பருப்பு வேக வைக்கவும் கையாண்டேன்.  இது மசூர் Dhall (மைசூர் dhall, ஆரஞ்சு பருப்பு என்றும் சொல்வதாகக் கேள்வி).  ஆகவே சுலபத்தில் வெந்து விடுகிறது. இந்த பருப்பைத்தான் நான் சாம்பார் வைக்கவும், Dhall Fry (மும்பாய் வாசம் 8 வருட பாதிப்பு) செய்யவும் பயன் படுத்துகிறேன்.  இன்றைய மெனு உங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லயே!  இது தான் இன்று நான் செய்யப்போகும் சமையல்:
·  கீரை மசியல் (இந்துருவிடம் கற்றது):  ஒரு பாக்கெட் "frozen cream spinach",கடுகு,சீரகம், வத்த மிளகாய்,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்.,நானாக சேர்த்துக்கொண்டது தக்காளி, மஞ்சப்பொடி.
·  Carrot, பட்டாணி - கலவைக் காய்கறிகள் கறி.
·  Dhall Fry (வெரும் 'பருப்பு' என்று சொல்வதைவிட Dhall Fry ன்னு சொல்லி சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கிறது:-).
·  சாதம்.
இது போதும் என்ற தீர்மானத்துடன் கொத்தமல்லி (லல்லு கொண்டு வந்து என்னுடைய குளிர் பதனப்பெட்டியில் வைத்துச் சென்றது) எடுக்கையிலே அங்கு என்றோ வாங்கிய நூல்கோல் இரண்டும், ஒரு ஆரஞ் நிற குடமிளகாயும் "காளானுக்கு இரையாவதைவிட உனக்கு இரையாகிறேன்" என்று அரைகூவல் விட்டன. இவை இரண்டையும் எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு. தாளித்து கறி பண்ண ஆயத்தமானேன்.

சொல்ல மறந்துவிட்டேனே!  இந்த நூல் கோல் படுத்திவிட்டது.  குளிர் பதனப்பெட்டியில்(Freezer) இருந்ததால் கல் போல் ஆகிவிட்டது.  ஆண்களின் பொறுமையின்மைக்கு (சமையலில் மட்டும் தான்)) ஏற்ப அதை அப்படியே "Microwave"ல் வைத்து இளக (Thaw) வைத்தேன்.  அது என் மனம் போல் ஏகத்துக்கு இளகிவிட்டது. அதை சிரமப்பட்டு தோல் சீவினேன். கறி பண்ண ஆரம்பித்தால் குட மிளகாயும் (இந்த ஆரஞ்சு குடமிளகாய் அமெரிக்காவில் கொஞ்சம் விலை அதிகம்), நூல்கோலும் போட்டி போட்டுக்கொண்டு நீர் விட்டுக்கொள்ளத் தொடங்கிவிட்டன.  கறியைப்பார்த்தால் அழகான நிறச்சேர்க்கையுடன் தோற்றமளித்தது.  ஆயினும் சொத சொதப்பாக இருந்தது. நான் செய்யும் கறிகள் எல்லாம் அளவுக்கு மீறி வேகாமல், அந்தந்த காய்கறிகளின் நிறமும், தன்மையும் மாறா வண்ணம் அமைய முயற்சிப்பேன்.  கவலையை மறக்க வேறு சமயலின் தி என்ன என்று பார்க்கலானேன்.  மற்றவை எல்லாம் மனம்போல் அமைந்து விட்டன.  வெந்த பருப்பைப்பார்த்தேன், நீராகிவிட்ட கறியைப்பார்த்தேன்.  கூட்டிக்கழித்துப்பார்த்ததில் இரண்டையும் சேர்த்து கறியைக் கூட்டாக்குவதே உத்தமம் என்று கலந்துவிட்டேன். கூட்டு தயார்!
·  நூல்கோல், ஆரஞ்சு குடமிளகாய் கறிக் கூட்டு
அடுத்த 15 நிமிடங்களுக்கு  "கறி பாதி , கூட்டு பாதி கலந்து செய்த கலவை தான் "என்று ஆளவந்தான் பட பாட்டு ராகத்தில் பாடிக்கொண்டே குளிக்கச்சென்றேன்.

அன்புடன்
குமார் சின்னம்பி

No comments: